"எட்டி பழுத்தென்ன ஈயாதார் வாழ்ந்தென்ன” ஈயாதாரிடம் செல்வம் இருந்தென்ன பயன்? நான் இதைச்சொல்லவில்லைங்க. நம்ம பாட்டி ஓளவையார்தான் நச்சுன்னு சொல்லியிருக்காங்க.
தர்மம், தானம் என்கிற பெயரில் செய்திதாள்களில் புகைப்படங்களோடு நம் மக்கள் போட்டோ எடுத்து விளம்பரம் தேடிச் செய்கிற தானத்தை பற்றியோ தன் கருப்பு பணம் வெள்ளையாக மாற்றச் செய்யும் அரசியல்வாதிகள், தொழிலதிபர்களின் தானத்தைப்பற்றியோ சொல்லப்போவதில்லை. உண்மையான தானம் என்றால் எப்படி இருக்கவேண்டும்? தானம் என்பதன் உண்மையான பொருள் என்ன என்பதைப் பற்றித்தான் இந்த பதிவு.
”ச்ரத்தயா தேயம்! அச்ரத்தயா தேயம்! ச்ரியா தேயம்! ஹ்ரியா தேயம்!
பியா தேயம்! ஸம்விதா தேயம்!”
-தைத்திரிய உபநிஷதம்(6)
இதோட அர்த்தம் என்னன்னா.....”நம்பிக்கை மிக்க ஈடுபாட்டுடன் தானம் செய்ய வேண்டும். ஏனோ தானோ என்று தானம் செய்யக் கூடாது. வருமானத்திற்கு ஏற்ப தானம் செய்ய வேண்டும். பணிவுடனும், மரியாதையுடனும், தகுந்த அறிவுடனும் தானம் செய்ய வேண்டும்.”
நல்லா கவனிங்க. இந்த மந்திரம் சொல்கிற இந்த 4 விஷயங்ளோட செய்கிற தானம் மட்டும் தான் தானம் என்கிற கேட்டகரியில் வரும். மற்றதெல்லாம் சும்மா..............பெருமைக்கும் விளம்பரம் தேடவும் செய்கிற பப்ளிசிட்டிதான்.
1. முதல்ல ஏனோதானோனு கொடுக்கக்கூடாது. ஈடுபாடு வேண்டும். உண்மையில் நற்பணியில் ஈடுபடுபவனுக்கு இறைவனே மனித உருவில் வந்து உதவுவார் என்ற ஆழ்ந்த நம்பிக்கை வேண்டும.
2.வருமானத்தில் இயன்ற அளவு ஒரு பகுதியைக் கட்டாயம் தானம் செய்ய வேண்டும். அதே சமயம் வருமானத்தை மீறி தானம் செய்துவிட்டு தான் மற்றவர்களிடம் தானம் பெறுகிற நிலைக்கும் செல்லக்கூடாது.
3. வீட்டு பால்கனியில் நின்றுகொண்டு ருபாய் நோட்டுகளை விட்டெறிந்து பொருக்கிக்கொள்ளுங்கள் பிச்சைக்காரர்களே என்றும் தானம் செய்யாதீர்கள். ஒருவருக்கு தானம் செய்ததால்தானே உங்களுக்கு நீங்களே தானம் செய்ததன் பலனை அடையமுடிந்ததென்று அவரிடம் நன்றியுடன் இருங்கள். பெற்றுக்கொள்பவனல்ல. கொடுப்பவனே, பேறுபெற்றவன். தானம் செய்வதன் முலம் நீங்கள் இந்த உலகத்தில் தூய்மையையும் நன்னிலையையும் அடைய ஒரு வாய்ப்பு கிடைத்ததற்காக நீங்கள் நன்றி உடையவர்களாக இருங்கள்.
என்ன ரொம்ப கஷ்டமான விஷயமா இருக்கா? என் பணத்ததையும் பொருளையும் நான் கொடுத்துவிட்டு நானே பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடாதென்றால் எப்படி என்கிறீர்களா?
ஒன்றுமட்டும் நல்லா புரிந்துகொள்ளுங்கள். நம்மை எதிர்பார்த்து சிலர் வாழ்கிறார்கள். நம்மால் மட்டுமே மற்றவர்களுக்கு நன்மை செய்ய முடியும் என்று மனதுக்குள் கர்வமாய் நினைப்பதே உங்கள் பலவீனம். இந்த பெருமையும் கர்வமுமே அனைத்து துன்பத்திற்கும் காரணம்.
உண்மை என்னன்னா....இந்த உலகத்தில் ஒருவர்கூட நம்மை எதிர்பார்த்து வாழ்வதில்லை. ஒரு பிச்சைக்காரன் கூட நம் கையை எதிர்பார்த்து இந்த உலகத்தில் உயிர்வாழவில்லை என்பதே நூறு சதவீதம் அக்மார்க் உண்மை.
இயற்கையே கடவுள். அனைவருக்கும் இயற்கையே உதவி செய்கிறது. நம்மை மாதிரி தானம் பண்றவங்க இல்லாவிட்டாலும் இயற்கை தேவைப்படுபவர்களுக்கு உதவிக் கொண்டுதான் இருக்கும். உங்களுக்காகவும் எனக்காகவும் என்றும் இயற்கை தன் செயலை நிறுத்தாது. உதவிக்கொண்டேதான் இருக்கும்.
பிறருக்கு உதவுவது என்பது நம்மை நாமே பண்படத்திக் கொள்வதற்காக இறைவனால் நமக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய வாய்ப்பு. பெரும் பேறு என்று மனதார நினைக்க வேண்டும்.
இதில் இருக்கிற இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால். ”பாத்திரம் அறிந்து பிச்சையிடு” என்பது பெரியோர் வாக்கு. நாம் ஒருவருக்கு ஒன்றை கொடுக்கும் முன் அது அவருக்கு தேவையிருக்கிறதா அந்த தானத்தால் அவர் பயன்பெறுவாரா என்பதையும் அறிந்த பின்னரே ஒன்றைக் கொடுக்க வேண்டும். ” பத்தோடு பதினொன்னு அத்தோடு இதுவொன்னு” என்று உபயோகபடுத்தாமல் முலையில், ஷோகேஸில் போட்டு வைக்கிறவர்களுக்கோ அல்லது ஏற்கனவே அதிகம் வைத்திருக்கிறவர்களிடம் மேலும் மேலும் கொண்டு சேர்ப்பதைவிட உண்மையிலேயே இல்லாதவர்களிடம் தேடிப்போய் உதவுவதே உயர்ந்த செயல்.
தற்காலத்தில் மிக மிக முக்கியமாய் நாம் செய்யவேண்டிய தானம் உயிரோடிருக்கும்போது இரத்ததானம். இறந்தபின் கண்தானம். இறந்தும் இறவாமலிருக்கும்போது உடல்உறுப்புதானம். ரொம்ப ரொம்ப அவசியம்ங்க. ஒவ்வொருவரும் ஒரு புதுவருடத்தில் அல்லது விஷேஷங்களில் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து ஒன்றுகூடி ரெஜிஸ்டர் செய்ய வேண்டிய முக்கிய ஆவணமே உடல்உறுப்பு தானம்தாங்க. மண்ணும் நெருப்பும் தின்றுவீணாய்ப்போகிற இந்த உடல் உறுப்புகள் தேவைஇருப்பவர்களுக்கு பயன்பட்டால் இறந்தபின்பும் நாம் அனைவர் உள்ளத்திலும் நீங்காது வாழ்வோமே!. நண்பர்களே யோசியுங்கள்.! செயல்படுங்கள்! பதிவுசெய்யுங்கள் உங்கள் உடல் உறுப்புகளை என்றும சிரஞ்சீவியாய் வாழ்வதற்காக!