Sunday 8 July 2012

நான் ஈ - உயரப்பறந்து நம்மை ஈர்க்கிறது!!

நான் ஈ - உயரப்பறந்து நம்மை ஈர்க்கிறது!!



எஸ்.எஸ். ராஜமவுலியின் கதை, திரைக்கதை, ,இயக்கத்தில் வெளிவந்து 3 மொழிகளிலும் பறந்து நம்மை ஈர்க்கிறது ஈ.

நானி, சமந்தா, சந்திப் மற்றும் மார்க்ட்டிங்கிற்காக சந்தானம் என்று கலைகட்டுகிறது ஈ.  கதை என்னவோ ஒன்லைன்தான். நானி சமந்தாவை விரும்புகிறார். சுதீப் சமந்தாவை அடையவிரும்பி நானியை கொல்கிறார்.  இறந்த நானி எப்படி ”நான் ஈ” ஆக மாறி சுதீப்பை பழிவாங்குகிறார் என்பதே கதை.

 லாஜிக் இல்லா மேஜிக் தான் நான் ஈ. லாஜிக் பார்க்காமல் ரசித்தால் மிகமிக சுவாரஸ்யமாய் காட்சிகளை நகர்த்தி நம்மை சீட்டின் நுனிக்கே கொண்டுவருவதிலிருந்தே ராஜமௌலியின் திறமை புரிகிறது.

இந்தப்படத்தில் உண்மையான கதாநாயகர்கள் என்றால் அது கம்யூட்டர் கிராபிக்ஸ்ஸில் கலக்கியிருக்கும் மேக்ஸிமா டீமும், ஒளிப்பதிவாளர் K.K. செந்தில் குமாரும் மற்றும் அளவான திகட்டாத இசையமைத்த மரகதமணியையும் சொல்லலாம்.  இவர்களின் கூட்டு உழைப்பினால் நம்மையும் உற்சாகத்தின் உயரத்தில் பறக்கவைக்கிறது ஈ.

                                       

நானி கதாபாத்திரம் தன் காதலை வெளிப்படுத்துமிடங்கள் மற்றும் நடிப்பு வெகு சிறப்பு மட்டுமல்ல சிறிது வித்தியாசமான காட்சியமைப்பும் கூட.

அழகு பதுமை சமந்தா அலட்டலில்லாமல் இயல்பாய் நடித்துள்ளார்.  நானி தன் கவனத்தைக் கவர செய்யும் செயல்களை தான் வேண்டுமென்றே அலட்சியப்படுத்தினாலும் அதை நானி பாஸிடிவ்வான காரணங்கள் சொல்லி சமாளிப்பதை ரசித்து சிரிக்குமிடங்கள் கொள்ளை அழகு. 

சுதீப் படம் முழுக்கு ஈயுடன் போராடும் வில்லத்தனமான கேரக்டர்.  கம்யூட்டர் கிராபிக்ஸில் வரும் ஈயை கற்பனை செய்து இவர் நடிக்கும் நடிப்பும் முகபாவனைகளும் பாராட்ட வார்த்தைகளில்லை. நிச்சயம் தமிழ் சினிமா இவரை வரவேற்கும் என்பதில் ஐயமில்லை.

                              

ஈ காரை ஆக்ஸிடென் ஆக்குவது, சுதீப்பை தூங்கவிடாமல் செய்வது, சமந்தாவுடன் உடல் அசைவிலேயே எண்ணங்களை வெளிப்படுத்துவது, சந்தீப்புக்கு கொடுத்த தொல்லைகளை சமந்தாவிடம் செய்துகாட்டி விளக்குவது போன்ற காட்சிகளில் மிகைப்படுத்தப்படாத கம்யூட்டர் கிராபிக்ஸ் உபயோகித்திருப்பதே படத்தின் மிகப்பெரிய பலம்.

ஈ பழிவாங்க கிளம்பும் ஒவ்வொரு காட்சியிலும் தியேட்டரில் விசில் சப்தம் காதைப் பிளக்கிறது.  சந்தானம் என்ட்ரியிலும் அதே கதைதான்.  ஆனால் வசனங்களில் கிரேஸி டச் ரொம்ப கம்மி. வழக்கமான பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கிரேஸி வசனங்கள்.

பாடல்கள் மனம் மயக்கும் மெலடி மலர்கள். ஈ பழிவாங்குமிடங்களில் பாடல்களின் சில வரிகளை உபயோகித்திருப்பது நல்ல இனிமை. 

படத்தில் கிராபிக்ஸ் இருப்பதே பெரிதாய் தெரியாதளவுக்கு படத்துடன் இயல்பாய் கலந்துகொடுத்து நம்மை படத்துடன் ஒன்றச்செய்து மிகமிக சுவாரஸ்யத்துடன் ஈ யைப் பறக்கச்செய்த டைரக்டர் ராஜமவுலிக்கு ஒரு சபாஷ்!!

ஈ - குழந்தைகள் முதல்  அனைத்து வயதினரையும் அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை.

குடும்பத்துடன் பார்க்கலாம்!. ஈ உயரப்பறக்கிறது!!

படங்கள் உதவி - தினமலர்.

Link

Related Posts Plugin for WordPress, Blogger...